ஒரு நாள் பார் ஒன்றில் தண்ணியைப் போட்டுக்கொண்டிருந்தோம்.எதிரில் வேறொருவர் தனியாக அமர்ந்து போதையேற்றிக் கொண்டிருந்தார்,அவரிடம் பேச்சை ஆரம்பித்தான் நண்பன்.நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டான். தான் ஒரு மருந்துக்கடை நகருக்குள் வைத்திருப்பதாக அவர் சொன்னார்.
நண்பனைப் பற்றி சில வார்த்தைகள்.M.Sc,M.Ed பார்டர் மார்க்கில் பாஸாகி முப்பத்தைந்து வயது வரை வேலை தேடிக்கொண்டிருப்பவன் தான் என் நண்பன்.அவனை ஒரு ஆசிரியராக உருவாக்கிவிட வேண்டுமென்று பல பத்தாண்டுகளாக திட்டம் போட்டு அவனை உருவாக்கியிருந்தனர் அவன் பெற்றோர்.அதனால் அவனுக்கு வாத்தியார் வேலை,அதுவும் கவர்மெண்ட் வேலையைத் தவிர உலகத்தில் வேறெதுவும் உயர்வானதில்லை என்ற எண்ணத்தில் உறுதியாய் இருப்பவன்.மருந்துக்கடை வைத்திருப்பவரை ஆழ்ந்து நோக்கினான்.இவ்வளவு தானா என்பதை பார்வையிலேயே உணர்த்திவிட்டு அவரிடம் இவ்வாறு கேட்கலானான்.இப்போது உங்களுக்கும்,எனக்கும் பொண்ணு கேட்டு போறோம் யாருக்கு தருவாங்க,சொல்லுங்க என்றான்.எதிர் பார்ட்டி திடுக்கிட்டார்.பின் சுதாரித்துக்கொண்டு எனக்கு திருமணமாகி,குழந்தைகள்,சொந்த வீடு,கார் என்று நல்ல வசதியோடு தான் வாழ்கிறேன்.ஒரு அரசாங்க ஊழியரை விட தான் எல்லாவகையிலும் நன்றாகவே வாழ்கிறேன்,மேலும் தொழிலை சிறப்பாக நடத்திக்கொண்டிருப்பதற்காக தேசிய அளவில் ஒரு விருதும் வாங்கியுள்ளேன் என்றும் கூறினார்.அடுத்து நண்பன் ஆரம்பித்தான் .விருது என்னங்க விருது செருப்பு தைக்கிறவன் கூடத்தான் நல்லா தைச்சா விருது வாங்க முடியும்.உங்க கிட்ட இருந்து நான் தெரிஞ்சுக்கிறதுக்கு ஒன்னுமே இல்ல என்று சொன்னான்.எதிராளிக்கு முகம் செத்து விட்டது.எழுந்து சென்று விட்டார்.
எனக்கோ இவனுடன் சேர்ந்து ஏன் தான் வந்தோம் என்று ஆகிவிட்டது.வேலை கூட இல்லாத சூழலில் சமூகத்தில் நல்ல நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனிடம் எப்படி இவ்வாறு பேசமுடிகிறது என்று நான் அதிர்ச்சியாகி விட்டேன்.
அடுத்து ஒரு சம்பவம்.தனியார் பள்ளி ஒன்றில் தன்னை வேலைக்கு சேர்த்துக் கொள்ளச்சொல்லி பணம் கொடுத்து ஏமாந்த கதை.கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாயை பள்ளி முதலாளியிடம் கொடுத்து விட்டு பள்ளியில் இலவச சேவை செய்து வந்தான்.ஒரு கட்டத்தில் தனக்கு வேலை கிடைக்காது என்பதை உணர்ந்து தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்க ஆரம்பித்தான்.அவனைப் போல் நூறு பேருக்கு இல்லை என்று பதில் சொல்வதையே தன் வேலையாய் வைத்திருக்கிறார் பள்ளி முதலாளி.நண்பனும் நடையாய் நடந்து களைத்துப் போய்விட்டான்.அப்போதும் தன் மதிப்பை விட்டுக்கொடுக்காமல் சொன்ன வாசகம் இதுதான்."இந்தப் பையன் கொடுத்த பணத்தை வாங்காமல் விடமாட்டான் போல இருக்கே" என்று அந்தப் பள்ளி முதலாளியை நினைக்க வைத்து விட்டேன் என்று சொன்னான்.கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்கோ திகைப்பு,காசு கொடுத்து ஏமாந்ததும் இல்லாமல் எப்படி இவ்வளவு கெத்தாக பேசமுடிகிறது இவனால் என்று. இன்று வரை காசு வாங்க முடியவில்லை.
இப்படி இருக்கும் பொழுது நண்பனுக்கு திருமணம் செய்து வைத்தனர்."முப்பது பவுன் நகை போடுறாங்களாம்,பிச்சைக்காரப்பசங்க" மாமனார் வீட்டைப் பற்றிய நண்பனின் கமெண்ட்.வேலை,வெட்டி இல்லாத உனக்கு பெண் கொடுப்பதே பெரிது என்று மற்ற நண்பர்கள் அவனுக்கு விளக்க வேண்டி இருந்தது.
இப்படியாக பல நேரங்களில் எங்களை மண்டை காய வைத்திருக்கிறான் நண்பன்.இதை சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் என்று நினைத்துக் கொண்டேன்.உண்மையிலேயே பெரும் பனமோ,புகழோ,தகுதியோ,திறமையோ உள்ளவர்களுக்கு வருவது தான் சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்.நண்பனிடம் குறிப்பிட்டுச் சொல்லும் படியான எந்த விசயமும் இல்லை.பின் ஏன் இப்படி அளவுக்கதிகமாக அலட்டிக்கொள்கிறான் என்று நினைப்பேன்.அப்போது தான் NPD (Narcissistic Personality Disorder) என்பதைப் பற்றி அறிய நேர்ந்தது.தன்னைப் பற்றி தகுதிக்கு மீறி,தன்னையே வியந்து போற்றிக்கொள்ளும் ஒரு இயல்பு இந்த NPD உள்ளவர்களுக்கு இருக்கிறது.
நண்பனின் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கைகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வர இப்போது தான் முடிந்தது.NPD போன்று MPD(Multiple personality disorder ) என்று ஒரு பாதிப்பு மனிதர்களிடம் இருக்கிறது.இப்படி ஆட்களில் யாரையும் இதுவரை சந்திக்கவில்லை.ஆனால் வலைப்பதிவர்களில் MPD பாதிப்பு பெருமளவில் இருப்பதை உணர முடிகிறது.
