Saturday, January 26, 2008

NPD

தற்பெருமை கொள்ளாத எந்த ஒரு மனிதனும் இங்கு இல்லை.அளவு தான் மாறுபடுகிறது.அளவைத் தாண்டும் போது அது அருவருக்கத் தக்கதாகி விடுகிறது.நண்பன் ஒருவனுடனான அனுபவங்கள் தான் இந்தப்பதிவு.

ஒரு நாள் பார் ஒன்றில் தண்ணியைப் போட்டுக்கொண்டிருந்தோம்.எதிரில் வேறொருவர் தனியாக அமர்ந்து போதையேற்றிக் கொண்டிருந்தார்,அவரிடம் பேச்சை ஆரம்பித்தான் நண்பன்.நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டான். தான் ஒரு மருந்துக்கடை நகருக்குள் வைத்திருப்பதாக அவர் சொன்னார்.

நண்பனைப் பற்றி சில வார்த்தைகள்.M.Sc,M.Ed பார்டர் மார்க்கில் பாஸாகி முப்பத்தைந்து வயது வரை வேலை தேடிக்கொண்டிருப்பவன் தான் என் நண்பன்.அவனை ஒரு ஆசிரியராக உருவாக்கிவிட வேண்டுமென்று பல பத்தாண்டுகளாக திட்டம் போட்டு அவனை உருவாக்கியிருந்தனர் அவன் பெற்றோர்.அதனால் அவனுக்கு வாத்தியார் வேலை,அதுவும் கவர்மெண்ட் வேலையைத் தவிர உலகத்தில் வேறெதுவும் உயர்வானதில்லை என்ற எண்ணத்தில் உறுதியாய் இருப்பவன்.மருந்துக்கடை வைத்திருப்பவரை ஆழ்ந்து நோக்கினான்.இவ்வளவு தானா என்பதை பார்வையிலேயே உணர்த்திவிட்டு அவரிடம் இவ்வாறு கேட்கலானான்.இப்போது உங்களுக்கும்,எனக்கும் பொண்ணு கேட்டு போறோம் யாருக்கு தருவாங்க,சொல்லுங்க என்றான்.எதிர் பார்ட்டி திடுக்கிட்டார்.பின் சுதாரித்துக்கொண்டு எனக்கு திருமணமாகி,குழந்தைகள்,சொந்த வீடு,கார் என்று நல்ல வசதியோடு தான் வாழ்கிறேன்.ஒரு அரசாங்க ஊழியரை விட தான் எல்லாவகையிலும் நன்றாகவே வாழ்கிறேன்,மேலும் தொழிலை சிறப்பாக நடத்திக்கொண்டிருப்பதற்காக தேசிய அளவில் ஒரு விருதும் வாங்கியுள்ளேன் என்றும் கூறினார்.அடுத்து நண்பன் ஆரம்பித்தான் .விருது என்னங்க விருது செருப்பு தைக்கிறவன் கூடத்தான் நல்லா தைச்சா விருது வாங்க முடியும்.உங்க கிட்ட இருந்து நான் தெரிஞ்சுக்கிறதுக்கு ஒன்னுமே இல்ல என்று சொன்னான்.எதிராளிக்கு முகம் செத்து விட்டது.எழுந்து சென்று விட்டார்.

எனக்கோ இவனுடன் சேர்ந்து ஏன் தான் வந்தோம் என்று ஆகிவிட்டது.வேலை கூட இல்லாத சூழலில் சமூகத்தில் நல்ல நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனிடம் எப்படி இவ்வாறு பேசமுடிகிறது என்று நான் அதிர்ச்சியாகி விட்டேன்.

அடுத்து ஒரு சம்பவம்.தனியார் பள்ளி ஒன்றில் தன்னை வேலைக்கு சேர்த்துக் கொள்ளச்சொல்லி பணம் கொடுத்து ஏமாந்த கதை.கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாயை பள்ளி முதலாளியிடம் கொடுத்து விட்டு பள்ளியில் இலவச சேவை செய்து வந்தான்.ஒரு கட்டத்தில் தனக்கு வேலை கிடைக்காது என்பதை உணர்ந்து தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்க ஆரம்பித்தான்.அவனைப் போல் நூறு பேருக்கு இல்லை என்று பதில் சொல்வதையே தன் வேலையாய் வைத்திருக்கிறார் பள்ளி முதலாளி.நண்பனும் நடையாய் நடந்து களைத்துப் போய்விட்டான்.அப்போதும் தன் மதிப்பை விட்டுக்கொடுக்காமல் சொன்ன வாசகம் இதுதான்."இந்தப் பையன் கொடுத்த பணத்தை வாங்காமல் விடமாட்டான் போல இருக்கே" என்று அந்தப் பள்ளி முதலாளியை நினைக்க வைத்து விட்டேன் என்று சொன்னான்.கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்கோ திகைப்பு,காசு கொடுத்து ஏமாந்ததும் இல்லாமல் எப்படி இவ்வளவு கெத்தாக பேசமுடிகிறது இவனால் என்று. இன்று வரை காசு வாங்க முடியவில்லை.

இப்படி இருக்கும் பொழுது நண்பனுக்கு திருமணம் செய்து வைத்தனர்."முப்பது பவுன் நகை போடுறாங்களாம்,பிச்சைக்காரப்பசங்க" மாமனார் வீட்டைப் பற்றிய நண்பனின் கமெண்ட்.வேலை,வெட்டி இல்லாத உனக்கு பெண் கொடுப்பதே பெரிது என்று மற்ற நண்பர்கள் அவனுக்கு விளக்க வேண்டி இருந்தது.

இப்படியாக பல நேரங்களில் எங்களை மண்டை காய வைத்திருக்கிறான் நண்பன்.இதை சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் என்று நினைத்துக் கொண்டேன்.உண்மையிலேயே பெரும் பனமோ,புகழோ,தகுதியோ,திறமையோ உள்ளவர்களுக்கு வருவது தான் சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்.நண்பனிடம் குறிப்பிட்டுச் சொல்லும் படியான எந்த விசயமும் இல்லை.பின் ஏன் இப்படி அளவுக்கதிகமாக அலட்டிக்கொள்கிறான் என்று நினைப்பேன்.அப்போது தான் NPD (Narcissistic Personality Disorder) என்பதைப் பற்றி அறிய நேர்ந்தது.தன்னைப் பற்றி தகுதிக்கு மீறி,தன்னையே வியந்து போற்றிக்கொள்ளும் ஒரு இயல்பு இந்த NPD உள்ளவர்களுக்கு இருக்கிறது.

நண்பனின் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கைகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வர இப்போது தான் முடிந்தது.NPD போன்று MPD(Multiple personality disorder ) என்று ஒரு பாதிப்பு மனிதர்களிடம் இருக்கிறது.இப்படி ஆட்களில் யாரையும் இதுவரை சந்திக்கவில்லை.ஆனால் வலைப்பதிவர்களில் MPD பாதிப்பு பெருமளவில் இருப்பதை உணர முடிகிறது.

பின் தொடரும் சிலுக்கின் குரல்

இது நடந்து அஞ்சாறு வருஷமாச்சு.மனைவியும் நானும் தேனிலவுக்காக ஊட்டி போயிருந்தோம்.சுற்றிப் பார்க்க ஒரு வண்டியை ஏற்பாடு செய்திருந்தனர் விடுதி நிர்வாகத்தினர்.அதில் புதுமண தம்பதியராக ஒரு பத்து சோடி மக்களை ஏற்றிக்கொண்டு வண்டி கிளம்பியது.பக்கத்தில்
ஒரு சோடி நல்ல கலராக , பார்க்க வடநாட்டு மக்களாக தெரிந்தார்கள்.ஆங்கிலத்திலேயே
பேசி நம்மைக் கொன்று எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அருங்காட்சியகம் ஒன்றைப் பார்ப்பதற்காக வண்டி நின்றது .அனைவரும் உள்ளே சென்று பார்த்துக்கொண்டிருந்தோம்.கைகளை பாண்ட் பாக்கெட்டினுள் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்த என்னுடைய முழங்கையின் மேல் திடீரென ஒரு ரோஜாப்பூவை வைத்து அடித்தது போல் ஒரு சின்ன இடி.திரும்பிப் பார்த்தால் வண்டியில் அருகில் அமர்ந்துவந்த அழகுப்பெண்.நான் பார்க்கவும் அவர் அப்ப்ப்பா என்று வலியிலும்,வெட்கத்திலும் மெல்லிய குரலில் கத்தும் ஓசை காதில் விழவும் சரியாக இருந்தது.அவருடைய மார்பு தான் இடித்து விட்டது.என் வாழ்வில் அப்படியொரு இனிமையான,கிளுகிளுப்பான குரலை நான் கேட்டதில்லை.
ஆயிரம் சிலுக்குகள் ஒன்றாய்ச் சேர்ந்து காதில் கிசுகிசுப்பது போன்று இருந்தது அது.

சில நிமிடங்களில் எனக்கு சுய உணர்வு திரும்பியது.ஆஹா நம்ம ஊரு பொண்ணு தானா இது என்று நினைத்துக் கொண்டேன்.ஆபத்துக் காலங்களில் நம்மையும் அறியாமல் பேசுவது நம் தாய்மொழி தான்.

இந்தசம்பவம் என் நினைவடுக்குகளின் ஆழத்தில் இருந்தது.சமீபத்தில் தமிழ்நதியின் ஒரு பின்னூட்டம் பார்த்தேன்.தூங்கும் போது ஒருவனுடைய பின்புறத்தில் அடித்தால் எந்த மொழியில் கத்துவான் என்று கேட்டிருந்தார்.ஆங்கிலத்திலேயே கதைத்துக் கொண்டிருப்பவர்களை நன்றாகக் கேலி செய்திருந்தது அப்பின்னூட்டம்.அதைப் படித்தவுடன் மனதின் ஆழத்திலிருந்து விடுபட்டு மிதந்து மேலே வந்து விட்டது.

(தலைப்பு உபயம்-ஜெயமோகன்.அவருக்கு நன்றி.)

Friday, January 11, 2008

கலாமின் புத்தாண்டுச் செய்தி

புத்தாண்டு முடிந்து இத்தனை நாள் கழித்து இந்தப்பதிவா என்று நினைத்தாலும் சரித்திர நாயகனின் சிந்தனைகளை மறந்து விடக்கூடாது என்பது முக்கியம்.சன் தொலைக்காட்சியில் கலாம் பேட்டி வழங்கியதில் இருந்து சில வரிகள்.தனக்குப் பிடித்ததாக இரண்டு குறள்களை குறிப்பிட்டார்.
ஒன்று,
'வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு'
மற்றொன்று
'உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து'

இரண்டுமே மனம் சம்பந்தப் பட்டது.உயர்ந்த எண்ணங்களை மனதில் விதைத்தால் உயர்ந்த பலன்களைஅறுவடை செய்யலாம்.விதைத்து விட்டால்
தானாகவே பலன் கிடைத்து விடுமா?அதற்கும் வழி சொல்கிறார் கலாம்.

எண்ணங்களில் உறுதி,கடும் உழைப்பு,செயலில் தீவிரம் இம்மூன்றும் இருந்து விட்டால் எத்தகைய சாதனையையும் செய்யலாம்.என்னைப் போன்ற வசதி,வாய்ப்புகளற்ற ஆனால் கனவு மட்டுமே காணத் தெரிந்தவர்களுக்கு கலாம் ஒரு ஆற்றல்மூலமாகத் திகழ்கிறார்.
என்னுடைய கனவை சுருக்கமாகச் சொன்னால் மாபெரும் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்த வேண்டும்,அதில் பயில்பவர்களுக்கு ஆடம்ஸ்மித்,மார்க்ஸ்,நியூட்டன்,டார்வின்,ஐன்ஸ்டீன் போன்ற உலகை மாற்றிய சிந்தனையாளர்களை பயிற்றுவிக்க வேண்டும்.காலம் கருணை காட்டினால் ,அதாவது என்னை உயிரோடு விட்டு வைத்தால் இதையெல்லாம் செய்தே தீர வேண்டும்.

Thursday, January 10, 2008

நாய்க்கு மரியாதை

நிமிடத்துக்கு ஐம்பது வண்டி செல்லும் அந்த நெடுஞ்சாலையில் தினமும் ஒரு நாய் அடிபட்டு சாவது வாடிக்கை.வயிறு கிழிந்து கோரமாக செத்துக்கிடக்கும் நாயை அப்புறப்படுத்த யாருமே முன்வரமாட்டார்கள்,நானும் தான்.இதைச் செய்ய வேண்டிய நகர சுத்திகரிப்பு ஊழியர்களோ ஒரு நாள் கூட இதைச் செய்து பார்த்தில்லை.பல்லாயிரக்கணக்கான வாகனங்களால் ஏற்றப்பட்டு சில நாட்களில் அந்த நாய் இறந்த சுவடே தெரியாமல் போய்விடும்,தோல் கூட மிஞ்சாது.

வழக்கம் போல இப்படி ஒரு நாய் அடிபட்டு கிடந்த போது,தூரத்திலேயே அதைப் பார்த்து உச்சு கொட்டிக்கொண்டே வந்து கொண்டிருந்தேன்.அப்போது ஒரு இளைஞன் நாயின் காலைப் பிடித்து சாலையின் ஓரத்துக்கு இழுத்துக் கொண்டிருந்தான்.அழுக்கு வேட்டி,சட்டை,பரட்டைத்தலை
சகிதமாக இருந்த அவனைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினேன்.

அவன் ஒரு நாடோடி.ஒரு துணி மூட்டையும்,சுமந்து செல்ல ஒரு குச்சியும் பக்கத்தில் இருந்தது.சிறு இரும்புக்கம்பி ஒன்றை வைத்து சின்ன குழி ஒன்றை வெட்ட ஆரம்பித்தான்.பின் அந்த நாயை குழியில் இறக்கி மண்னைப்போட்டு மூடினான்.இவ்வளவையும் பார்த்துக்கொண்டிருந்த நான் வெட்கிப்போய் விட்டேன்.

மாபெரும் ஆன்மீகத் தத்துவங்களை அறிந்திராத நாடோடியின் மனிதநேயம் மெய்சிலிர்க்க வைத்தது.

Monday, January 7, 2008

பத்தே நிமிடங்களில் தூங்குவது எப்படி?

"மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்"
நமக்கு ரொம்ப பிடிச்ச குறள்.இது மாதிரி ஒரு பத்து குறள் அப்புறம் ஆத்திசூடி ,இது மட்டும் போதும் .ஒரு மனுசன் நல்ல வாழ்க்கைய நடத்துவதற்கு.ஆனா நல்லவனா இருக்குறதுக்கும் இளிச்சவாயனா ஆகுறதுக்கும் நூலிழை தான் வித்தியாசம்.
என் நண்பன் ஒருத்தன் அடிக்கடி சொல்லுவான்
‘கோமாளியா கூட இருக்கலாம்,ஆனா ஏமாளியா இருக்காத'
அப்படின்னு.ஆனா 'ஏமாளியா கூட இரு,ஏமாத்துறவனா இருக்காத' அப்படிங்கறது தான் நம்ம பாலிஸி.இதனால என்ன நன்மைன்னு கேட்குறீங்களா,நைட்டு படுத்தா பத்து நிமிசத்துல தூக்கம் வரும்.அது தான் நன்மை.

இருமை கடந்தவன்

நல்லது,கெட்டது;வெளிச்சம்,இருட்டு;ஆண்,பெண்;
உயர்ந்தது,தாழ்ந்தது போன்ற இருவேறு நிலைகளையும் சமமாக பாவிக்க ஒருவனுக்கு தெரிந்துவிட்டால் அவனை இருமைகளைக் கடந்தவன் என்று கூறலாம்.கிருஷ்ணனைப் பற்றிய வர்ணனையாக கீதையிலே இது வருகிறது.

Sunday, January 6, 2008

வணக்கம்

”ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது ஐயா
அது பொம்பள மனசு தான்யா”

அப்படின்னு நம்மாளுக பாடுறாங்க.

"The greatest question that has never been answered is 'what does a woman want?' "

அப்படின்னு ப்ராய்டு சொல்லுறாரு.ரொம்ப நாளா இதப்பத்தி யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.பொம்பள மனசு மட்டுமில்ல ஆம்பள மனசும் அப்படித்தான் ஆழம் காண முடியாதது.மனுசப்பய மனசுக்குள்ள என்ன நினைக்கிறான்னு சம்பந்தப்பட்ட ஆளுக்கே தெரியாது.மனசு ரொம்ப சிக்கலானது.

டைரி எழுதணும்னு ரொம்ப நாளா ஆசை,இது வரைக்கும் செஞ்சதில்லை.மனசுல தோன்றதயெல்லாம் எழுதி வப்போம்.