Friday, August 15, 2008

காந்தி திரைப்படம்




சுதந்திரதினத்தை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற காந்தி திரைப்படம் தூர்தர்ஷனில் தமிழில் ஒளிபரப்பப்பட்டது. ஆங்கிலத்தில் சிலமுறை பார்த்திருந்தாலும் தமிழில் பார்த்தது மிகவும் நன்றாக இருந்தது. நம் முன்னோர்களின் தியாகத்தையும்,சுதந்திரப்போராட்ட வரலாறையும் இதைவிட எளிமையாகவும்,அழகாகவும்,முக்கியமாக உண்மையாகவும் சொல்லிவிட முடியாது. காந்தி என்னும் மாமனிதனின் நாட்டைச்சேர்ந்தவன் என்று நாமெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

இறுதிக்காட்சிகளில் மிகமுக்கியமான ஒரு காட்சியை தூர்தர்ஷனில் இருட்டடிப்பு அல்லது கத்தரித்து விட்டார்கள். சுதந்திரம் வழங்க வெள்ளை அரசு முடிவு செய்தவுடன் காந்தி,ஜின்னா,படேல்,நேரு ஆகியோர் தனியறையில் ஆலோசனை செய்கின்றனர். தனிநாடு வேண்டுமென்று ஜின்னா உறுதியாக இருக்கிறார். காந்தி அவரை சமாதானம் செய்யும் விதமாக 'இந்தியாவின் முதல் பிரதமராக நீங்கள் இருங்கள்' என்கிறார், நீண்ட அமைதி நிலவுகிறது, நேருவின் குரல் அமைதியை உடைக்கிறது. "பாபு நீங்கள் சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன்,ஆனால் வெளியே நிற்கும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லை" என்கிறார். அடுத்ததாக ஜின்னா "சுதந்திர இந்தியா, சுதந்திர பாகிஸ்தானா அல்லது உள்நாட்டு யுத்தமா" என்று கேட்கிறார். ஜின்னாவின் முத்தாய்ப்பான இந்த வசனத்திற்குப்பிறகு அடுத்த காட்சியில் இருநாடுகளாக பிரிந்து தனித்தனி தேசியக்கொடி ஏற்றிக்கொண்டிருப்பார்கள். இந்த இரு காட்சிகளுக்கும் இடையிலே உள்ள காட்சி வெட்டப்பட்டுள்ளது. அதில் காந்தி இறுதி முயற்சியாக மற்ற மூவரையும் அறைக்கு வெளியே அழைத்து வந்து பேசுவார். படேல் தனிநாடு பிரிவினையை மூர்க்கமாக எதிர்ப்பார், உடனே ஜின்னா "நாங்கள் வெள்ளையனிடம் சுதந்திரம் பெற்று, மீண்டும் உங்களிடம் அடிமையாக இருக்க மாட்டோம்" என்று கூறுவார். உங்களிடம் என்று சொல்லும் இடத்தில் இந்துக்களிடம் அல்லது பிராமணர்களிடம் என்று குறிப்பாக சொல்லுவாரா அல்லது உங்களிடம் என்று பொதுவாக சொல்லுவாரா என்பது சரியாக நினைவில் இல்லை. படத்தின் பஞ்ச் வசனம் இதுதான். ஏன் இது தூர்தர்ஷனால் நீக்கப்பட்டது?. சினிமாவில் இடம்பெற்ற இந்த உரையாடல் இயக்குனரின் கற்பனையா? அல்லது உண்மையாகவே நடந்தது தானா? தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்களேன்.

Thursday, August 7, 2008

என் இனிய இசின்பயேவா

மனிதனின் உன்னதத்தை,அவனுடைய முயற்சிகளின் வலிமையை, அடையக்கூடிய உயரங்களுக்கான எல்லையை உலகுக்கு உரத்துச்சொல்லும் அழகுப்புயல் தான் இசின்பயேவா. சாதாரண குடும்பத்தில் பிறந்த இவருக்கு தான் செய்த சாதனைகளை தானே முறியடித்துக்கொண்டு இருப்பதே வேலை. இருபத்து நான்கு முறை உலகசாதனை செய்துள்ளாராம். இத்தனை தடவைகளுக்கும் மேலாக உலகசாதனை ஆப்பிரிக்கக்கண்டத்து ஆண் சிங்கம் ஒன்று செய்துள்ளது,பெயர் தெரியவில்லை. போல்வால்ட் விளையாட்டில் ஐந்து மீட்டருக்கும் மேல் தாண்டிய உலகின் ஒரே பெண்மணி.கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிய இசின்பயேவா இம்முறையும் வாங்கவேண்டும்.

(ஒலிம்பிக்கில் செஸ்,கிரிக்கெட் போன்ற அறிவு சார்ந்த விளையாட்டுகளை சேர்க்காததற்கு ஒலிம்பிக் கமிட்டிக்கு கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த விளையாட்டுகளில் இந்தியா தான் தங்கம் வாங்கும் என்பதால் இவற்றை ஒலிம்பிக்கில் சேர்த்துக்கொள்ள உலகநாடுகள் சதி செய்கின்றன. இப்படி ஒரு கண்டுபிடிப்பை ஆ.வி அறிவுஜீவி மதன் செய்துள்ளார்)






Wednesday, August 6, 2008

பிரியாணிக்குஞ்சுகளை விஞ்சிய விசிலடிச்சான் குஞ்சுகள்

வலையுலக்குக்கே உரிய சொல்லாட்சி " பிரியாணிக்குஞ்சு" என்பது. இதை உருவாக்கிய மகராசன் யார் என தெரியவில்லை. தான் சார்ந்திருக்கும் கட்சிக்கு கண்மூடித்தனமான ஆதரவு கொடுப்பவர்கள் இந்த பி.குஞ்சுகள் . அரை பிளேட் பிரியாணிக்கும்,குவார்ட்டருக்கும் உயிரையும் கொடுக்கத்துணிபவர்கள் என்றால் மிகையாகாது.இவர்களுக்கு சற்றும் சளைக்காத இன்னொரு வகையினர் தான் விசிலடிச்சான் குஞ்சுகள். தங்கள் மனங்கவர்ந்த நடிகருக்காக மொட்டை போடுவது,காவடி தூக்குவது, அங்கப்பிரதட்சணம் செய்வது, கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, பேப்பரைக்கிழித்து சூறை விடுவது , மிக முக்கியமாக விசிலடிப்பது இவையே வி.குஞ்சுகளின் முக்கிய பணிகள். சமீபத்திய தசாவதார விமர்சன களேபரத்தில் வீறு கொண்டெழுந்த விசில் குஞ்சுகளின் ஆவேசம் ஆச்சரியமூட்டுவதாகவுள்ளது. பிரி.குஞ்சுகளின் ஆவேசத்தையாவது புரிந்து கொள்ளமுடியும். இனஉணர்வு,மொழியுணர்வு,கொளகை ரீதியான விசயங்கள் இவற்றுக்காக விடாப்பிடியாக அடித்துக்கொள்வார்கள்.இவர்கள் போராடுவதிலும் அர்த்தம் இருக்கிறது.தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து சொல்லாமல் இருந்தால் தங்கள் உரிமைகள் பறிபோகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தசாவதாரம் படம் அறுவை என்று சிலர் சொன்ன சப்பை மேட்டருக்காக விசில் குஞ்சுகள் வந்த வரத்து அச்சமூட்டுவதாக உள்ளது. இளைய சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது. விசில் குஞ்சுகளில் பெரும்பாலானோர் அரசியல்,சமூக விசயங்களில் எந்த கருத்தையும் உதிர்த்தது போல் தெரியவில்லை. கமல் படங்கள் ஓரளவிற்கு அறிவுபூர்வமாகவும்,அழகுணர்ச்சியோடும் இருந்தாலும் அவரது ரசிகர்கள் அவ்வாறில்லாமல் கண்மூடித்தனமாக ஆதரிப்பதால் என்ன பலன்?. பிரி.குஞ்சுகளுக்காவது கொள்கை,லட்சியம் என்று இருக்கிறபடியால் தங்கள் தலைவர்களின் முரண்பாடுகளை சகித்துக்கொண்டு இருந்து விடுகின்றனர், விசில் குஞ்சுகளுக்கு அப்படி என்ன நிர்ப்பந்தம் இருக்கிறது?.

இந்த இருவகை குஞ்சுகளிலும் சேராத தனித்தன்மை வாய்ந்த சிலர் இருக்கிறார்கள்.சுத்த சுயம்புவாக சிந்திக்கக்கூடியவர்கள், உலகமகா கருத்துக்களை சொல்பவர்கள், ஓட்டுப்போடக்கூட வரமாட்டார்கள். நடுநிலைக்குஞ்சுகள் என்று இவர்களை சொல்லலாம். கமலுக்கே இவ்வளவு வெறிபிடித்த விசில்குஞ்சுகள் இருக்கும்போது, ரஜினியைபற்றி சொல்லவே வேண்டாம். இவர்கள் இருவரும் அரசியலுக்கு வந்தால் அரசியல் பெருந்தலைகள் பலவும் பின்னங்கால் பிடறியில் பட ஓடி ஒளிவது மட்டும் உறுதி.

Sunday, August 3, 2008

ரஜினியின் குரங்குத்தவம்

ஒகனேக்கல் பிரச்சினையில் கன்னடர்களை உதைக்க வேண்டும் என ரஜினி உணர்ச்சி வசப்பட்ட போது, தான் விரும்பியோ,விரும்பாமலோ,அறிந்தோ,அறியாமலோ தமிழக அரசியலில் வலுவாக தன் இருப்பை,முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார் என்றே நினைத்தேன். கலைஞருக்குப் பின்னான அரசியலில் வேறு எவரையும் விட ரஜினிக்கு உள்ள வாய்ப்பு பிரகாசமானது. எதார்த்த நிலை இவ்வாறு இருக்க குசேலன் படத்துக்காக கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளது அவரது இமேஜை குலைப்பதாகவே உள்ளது. வருத்தம் தெரிவித்தது அவரது பெருந்தன்மையைக் காட்டுவதாக உள்ளது என்று ஒரு சாரார் எண்ணினாலும், மறுபுறம் அவரது குழம்பிய மனதை,அரசியல் தெளிவின்மையைக் காட்டுவதாகவே உள்ளது.

ரஜினியின் பலம் ஆன்மீகம் என்று கே.பாலச்சந்தர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.ஆன்மீகச்சிந்தனைகளாலும்,தவ வலிமையாலும் நிறைந்து உள்ள ரஜினியின் இச்செயல்கள் ஆன்மீகம்,தியானம் போன்றவற்றை ஐயுற வைக்கின்றன. இச்செயல்கள் அவர் ஒரு நல்லநடிகர் என்பதை நிருபிப்பதுடன்,மேலும் அவர் ஒரு நல்ல தலைவராக முடியாது என்றும் நிரூபிக்கின்றன. ரஜினி் ஒரு அரசியல் ஆளுமை என்பதால் தான் கன்னடர்களின் வெறுப்பை சம்பாதித்து உள்ளார்.ஒரு நடிகராக பேசியிருந்தால் கன்னடர்கள் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். எனவே தான் ஒரு நடிகரா, அல்லது அரசியல் ஆசை தனக்குள் இருக்கிறதா என்பதை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். அதுவரை சுண்டெலிகளும் அவரைக் கடித்து வைத்துவிட்டு கொக்கரிப்பது தொடரத்தான் செய்யும்.