Friday, October 3, 2008

ஜீரோ டிகிரி

ஜீரோ டிகிரியை வாசித்தது ஒரு விபத்து தான். இலக்கின்றி நகருக்குள் சென்ற போது அரபுக்குதிரை ஒன்றின் அருமையான பின்பக்கங்களை ரசித்தவாறே பின் தொடர ஆரம்பித்து விட்டேன். கால்மணி நேர நடைக்குப்பின் குதிரை காணாமல் போன கணத்தில் நான் நின்று கொண்டிருந்தது பிரபல புத்தகக்கடையின் வாசலில். சிறிது நேரத்தை இங்கே போக்கலாம் என நினைத்து உள்ளே சென்றேன்.அரைமணி நேரம் அலசி முடிவாகத் தேர்ந்தெடுத்தது இரண்டு புத்தகங்கள்.ராகுல சாங்கிருத்தியாயனின் மனிதசமுதாயம்,சாருவின் ஜீரோ டிகிரியும். இரண்டில் ஒன்று தான் வாங்கவேண்டும். ராகுலா,சாருவா?.ராகுலை நம்பி வாங்கலாம்,சாருவின் மீது ஒரு மரியாதையும் இல்லை.ஆனாலும் இணையத்தை மேய்வதிலிருந்து அவரும் ஒரு இலக்கிய ஆளுமை என்று சந்தேகத்திற்கிடமின்றி தெரிகின்றது.பின்நவீனத்துவ பிச்சுவா பக்கிரிகளில் முதன்மையானவர் என்றும் உணர முடிகிறது,எனவே வாங்கிப்படிக்கலாம் என்று முடிவெடுத்து வாங்கிவிட்டேன்.உயிர்மை பதிப்பகத்தால் உயர்தரமாக அச்சிடப்பட்ட நூல்.புதுப்பொண்ணு போல் அச்சுக்குலையாமல் இருக்கும் புத்தகத்துக்கு வலிக்காமல் பக்கங்களைத் திருப்புகிறேன்,ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டிருந்தது ஜீரோ டிகிடி.முதல் பத்து பக்கங்களை தாண்டிவிட்ட போது காதிலே சூடாக உணர்ந்தேன்,தொட்டுப்பார்த்ததில் மூளை கலங்கி வழிந்து கொண்டிருந்தது தெரிந்தது.மூடிவிட்டு சிந்தித்தேன்.எப்படி இதை மேற்கொள்வது.இதைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் இல்லாமலா இருக்கும்.தேடியதில் கிடைத்தது கென்,சாருவின் இணையப்பக்கத்திலேயே ஒரு ஆங்கில விமர்சனம், மற்றும் ஒரு பெண். கென் மற்றும் சாருவின் பக்கம் சில தகவல்களை,விளக்கங்களை,நம்பிக்கையை அளித்தது.பெண் அவரை துவைத்து காயப்போட்டிருந்தார்,ராமலட்சுமியோ,சுப்புலட்சுமியோ..பெயர் தெரியவில்லை. Nonlinear வகையைச் சார்ந்தது இந்தக்கதை.இப்போது Non linear என்ற வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முற்பட்டேன்.இதற்கு முன்னமே அந்த வார்த்தையை கேள்விப்பட்டிருந்தாலும் அதைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்ததில்லை.ஏனென்றால் அது மிகவும் தத்துவார்த்தமான,சிக்கலான,ஆழமான அர்த்தங்களைக்கொண்டிருக்கும்,அந்த அளவுக்கு நமக்கு பொறுமை பத்தாது என்று எண்ணிக்கொண்டு சும்மா இருந்து விடுவேன்.ஆனால் புரிந்துகொள்ள எளிமையாகத்தான் இருந்தது.Line என்றால் கோடு அதாவது நேர்க்கோடு.Nonline என்றால் நேர்க்கோடற்றது என்று அர்த்தம். மருது,ஆதிமூலம் போன்றவர்களின் ஓவியங்கள் கன்னா பின்னாவென்று கிறுக்கலாக வரையப்பட்டிருக்கும்.அதனால் அவர்களுக்கு தத்ரூபமான ஓவியங்கள் வரையத்தெரியாது என்று அர்த்தமல்ல.அவர்கள் அதையும் தாண்டி சென்றவர்கள்.ஓவியக்கலையிலே புதிய முயற்சிகளை மேற்கொள்பவர்கள்.சாருவின் எழுத்தும் அத்தகையது தான்.எழுத்துக்களை கலைத்துப்போட்டுள்ளார்.கலைத்துப்போடும் உத்தியில் மட்டும் பின்நவீனத்துவம் இருந்தால் அது ஏமாற்றுவித்தையாகி விடும்.எழுத்தில் மேட்டர் இருக்கா,சரக்கு இருக்கா,பொருள் இருக்கா,அர்த்தம் இருக்கா என்றால் இருக்கிறது, நிச்சயம் இருக்கிறது,நிறையவே இருக்கிறது.அவருடைய இணையப்பக்கத்தில் இருப்பது போல் எளிய நடையில் இல்லாமல்,தீவிரமான நடையில்,அருமையான சொற்களைக்கொண்டு உருவாக்கியுள்ளார்.கதையிலே காதல் இருக்கிறது,காமம் இருக்கிறது,சோகம் இருக்கிறது,துரோகம் இருக்கிறது,வறுமை,நம்பிக்கை,நகைச்சுவை இருக்கிறது,அறிவியல் இருக்கிறது,ஆன்மீகம் இருக்கிறது.சில இடங்களில் வெடிச்சிரிப்பு சிரிக்க முடிகிறது,சில இடங்களில் கண்ணீர் துளிர்க்கிறது.ஜீரோ டிகிரி என்பதற்குப்பதிலாக 360டிகிரி என்று வைத்திருக்கலாம்.ஆம் , கதை வாழ்க்கையின் சகல பக்கங்களையும் தொட்டுச்செல்கிறது.

ஆபாசமாக இருக்கிறது,அருவறுப்பு உணர்வு மேலோங்குகிறது என்று நினைத்துக்கொள்பவர்களுக்கு கதையிலேயே பதில் இருக்கிறது.

"மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியத்தைப்பார்த்த ஒருவன் சொன்னானாம்...ஏன்யா இவ்வளவு வரையத்தெரிந்த அந்த ஆளுக்கு கோமணமோ,ஜட்டியோ வரையத்தெரியாம போச்சு. புடுக்கெல்லாம் தெரியுதே."

எல்லையற்ற துணிச்சலும்,எல்லையற்ற எழுத்துவன்மையும் கொண்ட ஒருவனால் இப்படித்தான் கதை எழுத முடியும்.