Monday, July 28, 2008

இளம் ஆசிரியையும்,நானும்

கல்லூரியின் அழகான இளம் ஆசிரியை,என்னை விட ஒன்றிரண்டு வயது மூத்தவராக இருக்கலாம். கண்ணியமாக சேலை கட்டி வந்தாலும் அவரின் அழகான கவர்ச்சியிலே பயல்கள் கதிகலங்கிப் போயிருந்தார்கள்.அவரை எட்ட நின்று பார்த்து ரசித்தாலும், அவருடைய பார்வையில் நான் சிக்குவேன் என்று நினைத்திருக்கவில்லை.தேர்வு ஒன்று நடந்த போது கண்காணிக்கும் பணிக்கு வந்துவிட்டார் அந்த அழகு டீச்சர்.ஏற்கெனவே நமது விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியருக்கு ரத்தக்கொதிப்பு வந்துவிடும்,அந்த லட்சணத்தில் தான் இருக்கும் எனது பதில்கள். இந்நிலையில் இவர் வேறா?.கிழிஞ்சது கிருஷ்ணகிரி என்று நினைத்துக்கொண்டேன்.நம்ம கனவு டீச்சரை அருகிலே பார்த்து ரசிக்க நல்ல வாய்ப்பு தான் என்று மனசு துள்ளிக்குதித்தாலும், தேர்வெழுத வேண்டிய கடமை வேறு என்னை டென்சனுக்குள்ளாக்கிக்கொண்டிருந்தது. ஒரு வழியாக என்னுடைய பணியை தொடங்கிவிட்டேன்.அவர் பார்க்காத நேரங்களில் அவரை ரசித்துக்கொண்டே எழுத்துப்பணியை செய்து கொண்டிருந்தேன். சிறிது நேரம் சென்றிருக்கும் என்னையே யாரோ பார்ப்பது போல் ஒரு உணர்வு.நிமிர்ந்து பார்த்தால் டீச்சரின் பார்வை என்னை துளைத்துக்கொண்டிருந்தது.குத்தீட்டியை வைத்து நெஞ்சிலே குத்தியது போன்று இருந்தது, ஒரு நிமிடம் இதயத்துடிப்பு நின்று விட்டது.காரணம் அந்தக்கண்களிலே ஒரு கனிவு தெரிந்தது. ஒரு அந்நியனைப் பார்க்கும் பார்வையல்ல அது.கடவுளே என்ன சோதனை இது? நான் ஒழுங்காக தேர்வெழுத வேண்டாமா?.சிறிது நேரம் சென்றிருக்கும், அந்தக்கண்களில் வேறு ஏதாவது செய்தி தெரிகிறதா? பார் பார் என்று உத்தரவிட்டது உள்மனம். நிமிர்ந்தேன், மீண்டும் அதே பார்வை, உடன் ஒரு புன்னகை. சத்தான புன்னகையிலே ஆராய்ச்சியாளன் செத்தான்.இரண்டு மணி நேரம் இரு நிமிடங்களாக ஓடி விட்டது.உடன் எழுதியவர்கள் எல்லாம் சென்று விட்டனர். நான் மட்டும் கடைசி ஆள். மும்முரமாக எழுதுவதாக எழுதிக்கொண்டிருந்தேன்.அருகில் வந்தார் அழகு டீச்சர். முகத்தில் மாறாத புன்னகையுடன் "கேள்வியையே திரும்பத்திரும்ப எழுதியது போதும், பேப்பரைக்கொடுங்கள்" என்றார். எனக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது, நம்மைப் பற்றி எப்படிப் புரிந்திருக்கிறார் என்று ஆச்சரியம் வேறு. நானும் ஒரு புன்னகையுடன் விடைத்தாளைக்கொடுத்துவிட்டு வெளியேறினேன்.கன்னியரின் கடைப்பார்வைக்கே உயிரைக்கொடுக்கும் மக்கள் நம் மக்கள். முழுப்பர்வையையும் பெற்ற நான் சும்மா இருந்து விட முடியுமா?. அவர் வந்து போகும் வழியிலெல்லாம் நிற்கலானேன். வரிசையாக இருக்கும் மரங்களோடு என்னையும் ஒரு மரம் என்று நினைத்து விட்டாரா என்று தெரியவில்லை, என்னைக் கண்டு கொள்ளவேயில்லை.மனசு வெறுத்துப் போய்விட்டது. ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று துயரப்பட்டாலும்,இரண்டு மணிநேரம் என் இதயத்தை இலவம்பஞ்சாக்கி மிதக்கவிட்டாரே அது ஒன்றே போதும் என்று தேற்றிக்கொண்டேன் மனதை.பத்துப் பதினைந்து வருடங்களாக அசை போட்டுக்கொண்டிருந்த இந்நிகழ்வுக்கு திடீரென்று இப்போது வேறு ஒரு காரணம் புலப்பட்டிருக்கிறது.

தேர்வின் போது நான் பிட் அடித்துக்கொண்டிருந்தேன்.இளம் ஆசிரியை ஆரம்பத்திலேயே அதைக் கவனித்திருக்க வேண்டும். கையும் களவுமாகப் பிடிப்பதற்குப் பதில் என் மேல் அவருக்கு கரிசனம் ஏற்பட்டிருக்க வேண்டும். என் பரிதவிப்பைப் பார்த்து ரசித்திருக்கிறார் , அதே நேரத்தில் திருட்டுத்தனம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று என்னை ஸ்பெஷலாக கவனித்திருக்கிறார். சில நாட்களாகத் தான் இப்படியும் இருந்திருக்குமோ என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.அட எப்படி இருந்தால் தான் என்ன? அந்த இரண்டு மணி நேரத்தை ஜென்மத்துக்கும் மறக்க முடியாது.